அம்பாறை மாவட்டத்தில் கடந்த 06 மாத காலத்துக்குள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய 421 வர்த்தகர்களுக்கெதிராக 15 இலட்சத்து 87ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ் தெரிவித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புலானாய்வு உத்தியோகத்தர்களால் 600க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது, மேற்படி 421 வர்த்தகர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், அம்பாறை, தெகியத்தகண்டிய ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கமைவாக இந்த அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
இதில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருள்கள் விற்பனை செய்தமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை, மனித பாவனைக்கு உதவாத, காலாவதியான பொருள்கள் விற்பனை உள்ளிட்ட குற்றங்கள் கண்டறியப்பட்டதாகக் கூறினார்.